புதுடெல்லி: கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில், தேர்வுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு கடுமையான நிதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், இந்தப் புதிய உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ விவகாரங்களுக்கான துறையின் தலைவராக இருக்கும், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இந்த தேர்வுமுறை நடவடிக்கைகள், ராணுவத்தின் உபகரணம் மற்றும் செயல்பாட்டை தீவிரமாகப் பாதிக்கும் என்று அதிகாரிகள் மட்டத்தில் கவலை தெரிவிக்கப்படுகிறது.

ராணுவத்திற்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பயிற்சி சிமுலேட்டர்களுக்கான செலவினங்களைக் குறித்து சமீபத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதுவரை இல்லாத புதிய நடைமுறையாக, இந்தியாவின் முப்படைகளுக்கும் சேர்த்து, தலைமை தளபதியாக, நரேந்திர மோடி அரசால் நியமிக்கப்பட்டார் பிபின் ராவத். சிஏஏ குறித்து இவர் வலியவந்து தெரிவித்த கருத்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, விமர்சனங்களையும் எழுப்பியது.