ஈரோடு:
னியார் பள்ளிகள் விருப்பம் இருந்தால் ஆன்லைனில் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிக்கூடங்கள் விருப்பம் இருந்தால் ஆன்லைன் மூலம் தேர்வை நடத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் 405 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதால், மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ‘பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா’? என்று நிருபர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்’. என்றார்.