திமுக தலைவர் ஸ்டாலினை, பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜக தலைமையின் கருத்தா என தெரியவில்லை என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் மத்திய அரசு மீது ஸ்டாலினுக்கு சாப்ட்கார்னர் வந்துவிட்டது. இப்போது எல்லாம் மத்திய அரசை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சிப்பதில்லை. அடுத்த கைது பயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கிறார்.

மு.க ஸ்டாலினை சி.பி.ராதாகிருஷ்ணன் புகழ்ந்தது பாஜகவின் கருத்தா என தெரியவில்லை. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு ரேசன் வாங்கினால், அவர்களுக்கு விலையில்லா அரிசி வழங்கப்படாது” என்று தெரிவித்தார்.

முன்னதாக வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தலைவர்களில் ஒருவரான சி.பி ராதாகிருஷ்ணன், “கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றி பெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.