சென்னை:

புதிய படங்களை ரீலிஸ் செய்த பிறகு விபிஃஎப் கட்டணம் விதிப்பது பற்றி பேசலாம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளுக்கான விபிஎஃப் கட்டணத்தை தயாரிபபாளர்கள் செலுத்தமாட்டார்கள் என்று இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான பாரதிராஜா சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களால் அந்த கட்டணத்தை செலுத்த முடியாது என்றும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்து இருந்தனர்.

அதன் பிறகு இரண்டு கட்டங்களாக இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால், அறிவிப்பு வெளியானபடி நவம்பர் 10ம் தேதி புதிய திரைப்படங்கள் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடவேண்டும், திரையரங்குகளுக்கு தயாராப்பாளர்கள் கட்டுப்பாடு விதிக்கவேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். புதிய படங்களை ரிலீஸ் செய்தபின்பு வி.பி.எஃப் கட்டணம் விதிப்பதுபற்றி பேசுவது சரியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். திரையரங்குகளை வரும் 10ஆம் தேதிமுதல் திறக்கலாம் என கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.