சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் காமராஜ் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 5ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் சிகிச்சை முடிந்து அமைச்சர் வீடு திரும்பினார். ஆனாலும் அமைச்சர் காமராஜூக்கு மூச்சுத்திணறல் ஏற்பட முதலில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த அமைச்சர் காமராஜூக்கு கடந்த 25 ம் தேதி வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.