சென்னை: ஈஷா யோகா மையம் முறைகேடு செய்துள்ளதா என்பது குறித்து தமிழகஅரசு விசாரிக்கும் என தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாக ஊடங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களிலும் பேசும்பொருளாக மாறியதுடன்,  பரபரப்பான விவாதங்களும் நடைபெற்றன.  நமது பத்திரிகை டாட் காம் இணையதள பத்திரிகையும் செய்தி வெளியிட்டது. ஆனால், அமைச்சர் சேகர்பாபு அப்படியொரு தகவலை தெரிவிக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருந்தாலும், வனத்துறைக்கு சொந்த இடங்களை மடக்கி ஆசிரமம் நடத்தி வரும் ஜக்கியின் ஈஷா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வரும் நிலையில், ஈஷா யோகா மீது ஏற்கனவே பல வழக்குகளை தொடர்ந்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நிர்வாகி சவுந்தரராஜனும், தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அரசுக்கு தர தயார் என்று தெரிவித்து உள்ளார்.

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம். இந்த மையத்தின் கிளைகள் உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு  ஆதரவாக செயல்பட்டு வரும்  ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஜக்கி வாசுதேவ் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மற்றோருபுறம் காவிரி கூக்குரல் என்ற பெயரில் காவிரி உரிமை மீட்பிலும் ஈடுபட்டார்.  சமீப காலமாக, இந்துக்கோவில்களை பராமரிக்கும் பணி இந்துக்களிடமும், அதற்குரிய மடாதிபதிகளிடமும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியிறுத்தி வருகிறார். அரசின் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து விடுபட வேண்டும் என்று,  தமிழக அரசு பராமரித்து வரும் கோயில்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரி வருகிறார். இதுகுறித்து முதல்வரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஜக்கின் இந்த நடவடிக்கை  சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக, ஆதரவு எதிர்ப்பு என  இரு தரப்பிலும் கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பழனி முருகன் கோயிலில் தூய்மைப் பணி தொடர்பான வழக்கில்,  நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  ‘இந்துக் கோயில்கள் அரசு மற்றும் அதன் அலுவலர்கள் நிர்வாகத்தில் செயல்பட்டுவருவது தவறு; இதனால், கோயில்களின் புனிதம் கெட்டுப்போகிறது; விரைவில் கோயில்களை இந்து மதத்தில் நம்பிக்கையிருக்கும் நேர்மையானோர் பொறுப்பில் விட்டுவிடுவது நல்லது’ என கூறியிருந்தார். இது இந்து ஆதரவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து, இந்துக்கோவில்கள் இந்துக்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றனர். கிறித்தவ மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் அம்மதத்தினரிடமே இருப்பதுபோல், இந்துக்களின் வசமே இந்துக் கோயில்கள் இருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் எழுந்துள்ளன.

ஆனால், மற்ற மதத்தினருக்கும் இந்து மத்தினருக்கும் வேற்றுமை உள்ளது. இந்து மதத்தின் பெருமையே,  அது மக்களின் நம்பிக்கையால் மட்டுமே இயங்கக்கூடிய மதமாக இருப்பதே. இதனால்தான், நாத்திகர்களைக்கூட தம்மில் ஒரு பகுதியாகக் கருதுகிறது. இந்து மதக் கோயில்களை நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசே சிறந்தது என்றும், அதற்காகத்தான தமிழக அரசில், அறங்காவல் துறை உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறத.

இப்படியான சூழலில்தான்,  அமைச்சர் சேகர் பாபு, ஈஷா மையம் மீது விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என்று  தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது விமர்சனங்களை உருவாக்கிய நிலையில், இதை சுற்றுச்சூழல் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ வரவேற்றுள்ளனர். மேலும் அவர்கள், ‘ஈஷா மையத்துக்கு எதிராக எங்களிடம் உள்ள தரவுகளை தரத் தயாராக இருக்கிறோம்’ என்றும் தெரிவித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில், சிலர், ஸ்டாலினை ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சந்தித்து பேசியதாக கூறி, ஒரு புகைப்படத்தையும் வைரலாக்கினர். இதானால், ஈஷா விவகாரம் மேலும் பரபரப்பு அடைந்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை பெற்று வந்தது. தற்போதைய அரசியல் சூழலில்,  ஜக்கியின் யோகா மையத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என பல தரப்பில் இருந்தும் குரல் ஓங்கி ஒலித்து வருகிறது. பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஸ்டாலின் ஜக்கி சந்திப்பு நடைபெற்றதாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால், அந்த புகைப்படமானது,   கடந்த 2018ம் ஆண்டு கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையிளல் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை பார்க்க ஏராளமான அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் சென்றனர். அதன்படி, ஜக்கி வாசுதேவும் நேரில் சென்று, பார்வையிட்டார். அப்போது எடுத்த புகைப்படம்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், தமிழக அரசு தரப்பில் இருந்து, ஜக்கியின் ஈஷா யோகா மையம் முறைகேடு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை, அமைச்சர் சேகர் பாபு அப்படியொரு கருத்தை தெரிவிக்கவில்லை என்று மறுக்கப்பட்டு உள்ளது.

ஈஷா யோகா மையம் மீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்குமா? என்பது போகப் போகத்தான தெரியும்.