சென்னை:  அமைச்சர் வேலுமணி இன்றோடு கொட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்”  என திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா?” என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.கவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு நல்ல வரவேற்பு பொதுமக்களிடையே கிடைத்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் அதிமுக அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. அதுபோல இன்று கோவையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், அதிமுகவினர் செட் செய்த இளம்பெண் ஒருவர் பிரச்சினை ஏற்படுத்தினார்.  இதற்கு  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரையடுத்த தேவராயபுரத்தில் இன்று நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்களுடன் பட்டியலிட்டு பேசினார். அப்போது தி.மு.கவினரைப்போல் கூட்டத்தில் புகுந்த அ.தி.மு.கவினர் முகக்கவசம் அணியாமல், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் வந்தனர். தி.மு.க நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பொறுக்க முடியாமல், அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே புகுந்து பிரச்சனை ஏற்படுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த செயல்லை  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது காணொளி காட்சி  உரையின் போது கடுமையாக கண்டித்ததுடன்,  தி.மு.க மக்கள் கிராம சபை கூட்டத்திற்குள், தி.மு.க தொப்பியுடன் புகுந்த பூங்கொடி என்ற பெண் அ.தி.மு.க மகளிர் பாசறையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அமைச்சர் வேலுமணியால் அனுப்பப்பட்ட அந்த பெண் என்பதும் உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின்  அமைச்சர் வேலுமணி கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். வேலுமணி  இன்றோடு கொட்டத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றதுடன், வேலுமணி உள்ளாட்சி அமைச்சரா? ஊழலாட்சி அமைச்சரா?”  என கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நிறைவு செய்து கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய விவரம் வருமாறு:
நான் முன்னுரையாக அதிக நேரம் பேசினேன். அதை நீங்களும் கேட்டு, அதை புரிந்துகொண்டு, உள்வாங்கிக்கொண்டு, ஆண்களில் ஐந்து பேரும், பெண்களில் ஐந்து பேரும் உங்களுடைய கருத்துக்களைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். ங்கு, இடையே ஒரு சகோதரி கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார். எனக்கு நேற்றே தெரியும். இந்தக் கூட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று வேலுமணி திட்டமிட்டு இந்தக் காரியத்தைச் செய்து இருக்கிறார். நீங்கள் ஒரு பொதுக்கூட்டத்தைத் தடுக்க முயற்சி செய்தால், நாங்கள் உங்களுடைய எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது கட்டுப்பாடு உள்ள இயக்கம். அதனால் தடையாக இருந்தவரைச் சரியாகக் கண்டுபிடித்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வெளியே அனுப்பிவிட்டோம். இதுதான் தி.மு.க.
வேலுமணி அவர்களே… மிஸ்டர் வேலுமணி அவர்களே… அமைச்சர் வேலுமணி அவர்களே… ஊழல் வேலுமணி அவர்களே… இன்றோடு உங்களது கொட்டத்தை அடக்கி கொள்ளுங்கள். இதேபோல தொடர்ந்தீர்கள் என்றால் நீங்கள் இல்லை, உங்கள் முதலமைச்சர் கூட எங்கேயும் கூட்டம் பேச முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் இறங்கினால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் மரியாதை. அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. அதை விட்டு விடுங்கள். அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை.
அ.தி.மு.க.காரர்களுக்கு தைரியம் இல்லை. அதுதான் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். நான்கு நாட்களில் ஒரு கூட்டம் போடப் போகிறீர்கள் அல்லவா? கூட்டத்தைச் சேர்ப்பதற்கு ரெக்கார்ட் டான்ஸ் எல்லாம் வைப்பீர்கள். ஒரு நடிகையை கூப்பிட்டு வரப் போகிறீர்கள். நடத்துங்கள், நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. அது உங்கள் ஜனநாயகம். உங்கள் பண்பாடு. உங்கள் கலாச்சாரம். அதை நடத்த வேண்டாம் என்று சொல்லவில்லை.
இந்தக் கூட்டத்தில் புகுந்து அதுவும் தி.மு.க. தொப்பியை வாங்கிப் போட்டுக்கொண்டு செய்திருக்கிறீர்கள். தைரியமாக அ.தி.மு.க. என்று சொல்லி வந்து உட்கார்ந்து இருக்க வேண்டும். தி.மு.க. என்ற போர்வையில் வந்து உட்கார்ந்து விட்டு கலவரத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார். அமைச்சர் வேலுமணி இப்படி ஒரு செயலைத் திட்டமிட்டு செய்திருப்பதற்கு என்ன காரணம்? அதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. அந்த காட்சிகளை எல்லாம் பத்திரிகை நிருபர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தச் செய்தியையாவது அவர்கள் சரியாக போடுவார்கள் என்று நினைக்கிறேன்.
எங்கள் நிகழ்ச்சியை எடுப்பதற்கு செய்தியாளர்கள் இவ்வளவு முண்டியடித்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள். ஏனென்றால் இதுதான் நல்ல நிகழ்ச்சி. இதுதான் மக்கள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சி என்று புரிந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்.
எங்கள் நிகழ்ச்சியைச் சீர்குலைக்க அ.தி.மு.க., அதிலும், குறிப்பாக வேலுமணி எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்பட்டிருக்கிறார் என்பதனை தயவு செய்து மக்களுக்கு உங்கள் ஊடகத்தின் மூலமாக போட்டு வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். இல்லையென்றால் உங்களுக்குத்தான் கெட்ட பெயர்.
நீங்கள் போட்டாலும், போடவில்லை என்றாலும் அது சமூகவலை தளங்களில் வரப்போகிறது.
இங்கே பேசியவர்கள் மிகச்சிறப்பாக பேசியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். மிகச் சிறப்பாக, பாராட்டக்கூடிய வகையில் நம்முடைய மாவட்ட செயலாளர் அவர்கள் அந்தப் பொறுப்பை உணர்ந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக இருக்கவேண்டும், மிக அமைதியாக நடக்க வேண்டும், அடக்கமாக நடக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்திருக்கிறார். அவருக்கு துணை நின்று பணியாற்றியிருக்கூடிய தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அவர்களுக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களைத் தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியை அழகு படுத்தவேண்டும், உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக நம்முடைய கழக முன்னோடிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நான் தொடக்கத்தில் பேசுகிறபோது, ஊழல் மணி, வேலுமணி என்ன அக்கிரமங்கள் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார் என்று சொன்னேன். எல்.இ.டி. பல்பு பற்றி சொன்னேன். அதில் எவ்வளவு கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று இருக்கிறது என்பது பற்றியெல்லாம் சொன்னேன்.
இப்பொழுது எனக்கு மற்றும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. அதாவது “நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்” என்று சொல்வார்கள்.
அதாவது வேலுமணியைப் பொறுத்தவரைக்கும் நிமிடத்திற்கு நிமிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அதுதான் அவருடைய வேலை. தகவல் அறியும் உரிமைச் சட்டம், அந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் ஒரு தகவல் கோரி இருக்கிறார். அந்தத் தகவலைக் கேட்ட போது சில ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
அதை இப்பொழுது உங்களிடம் சொல்கிறேன். அது என்னவென்றால் சாக்கடை அடைப்பு சரி செய்யக்கூடிய ‘டிச் கொத்து’வின் விலை 130 ரூபாய். வேலுமணி அவர்கள் கொடுத்த விலை 1010 ரூபாய். அதேபோல் சுண்ணாம்பு பவுடர், சுண்ணாம்பு பவுடரில் ஊழல் செய்யக்கூடிய ஒரு மந்திரி யார்? என்று கேட்டால் இந்த வேலுமணி தான்.
சுண்ணாம்பு பவுடர் 25 கிலோவின் விலை 170 ரூபாய். ஆனால் வேலுமணி கொடுத்த விலை 842 ரூபாய். பினாயில் ஒரு லிட்டர் 20 ரூபாய் தான். ஆனால் அவர் கொடுத்து இருக்கக்கூடிய விலை 130. மோட்டார் விலை 1500 ரூபாய். வேலுமணி கொடுத்திருக்கக் கூடிய விலை 29,465 ரூபாய். தெருவுக்கு 40 வாட்ஸ் பல்ப், பிட்டிங் – அதன் விலை 870 ரூபாய். ஆனால் வேலுமணி கொடுத்திருக்கக் கூடிய விலை 2080 ரூபாய்.
இதில் மட்டும் ஒவ்வொரு ஊராட்சியிலும் சராசரியாக ஒரு கோடி ரூபாய் ஊழல் என்று பார்த்தால் 12600 ஊராட்சிகளுக்கு மேல் உள்ளது. ஒரு ஊராட்சிக்கு ஒரு கோடி என்றால் 12600 கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டிருக்கிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இது தெரியவந்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு மோசமான ஊழல் பேர்வழி தான் இந்த துறையின் அமைச்சராக இருக்கிறார். இந்த மாவட்டத்தின் அமைச்சராக இருக்கிறார். இவர் மட்டுமல்ல இன்றைக்கு எடப்பாடியில் இருந்து கடைசியாக இருக்கும் எல்லா அமைச்சர்கள்வரை, அடுத்த நான்கு மாதங்களில் எவ்வளவு கொள்ளை அடிக்க வேண்டும், எவ்வளவு சுரண்ட வேண்டும் என்று திட்டமிட்டு அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு எல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதுதான் வரப்போகிற தேர்தல். இந்தத் தேர்தலை நல்ல முறையில் பயன்படுத்தி சரியான பாடத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
இங்கே பேசிய கவிதா அவர்கள் விவசாயத்தில் உள்ள பிரச்சினைகள் எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். ஞானமணி அவர்கள், காட்டுச்செடி மற்றும் பன்றிகள் பிரச்சினை பற்றிச் சொன்னார்கள். விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். அதேபோல எம்.டி.குமார் அவர்கள் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கல்பனா அவர்கள் சுயஉதவி குழு பிரச்சினைகளை பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ராஜேந்திரன் அவர்கள் வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய சிரமங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
‘ஊனமுற்றோர்’ என்ற பெயரை மாற்றி ‘மாற்றுத்திறனாளிகள்’ என்று பெயர் வைத்தது கலைஞர்தான் என்பது உங்களுக்கு தெரியும். அதற்கன்று ஒரு துறையை உருவாக்கி தன் கையில் வைத்திருந்தார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்.
மரம் ஏறும் தொழில்களில் உள்ள சிரமங்களைப் பற்றி சகோதரி சாந்தி அவர்கள் சொன்னார். படங்களெல்லாம் கொடுத்திருக்கிறார். நாம் ஆட்சியில் இல்லை. இல்லை என்றாலும் இப்பொழுது என்ன உதவிகள் எல்லாம் செய்ய முடியுமோ, அதெல்லாம் செய்வேன். கவலைப்படாதீர்கள். ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதை செய்யக் காத்திருக்கிறோம்.
அதேபோல குமார் அவர்கள் வாய்க்கால் பிரச்சனை பற்றியும் விவசாய பிரச்சனைகளை பற்றியும் தெளிவாகச் சொல்லி இருக்கிறார். ஆனால் நான் இங்கு அதிகமாக சொல்ல விரும்புவது விவசாயத்தைப் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
35 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய, எல்லா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளும் ஒன்று சேர்ந்து, கடும் குளிரையும், கொட்டுகின்ற பனியையும் பொருட்படுத்தாமல், அங்கேயே சமைத்து, அங்கேயே குடிசை போட்டு, குடும்பம் குடும்பமாக வந்து உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் போராடி வருகிறார்கள். ஏறக்குறைய பதினைந்து இருபது பேர் இறந்து இருக்கக்கூடிய செய்தி கூட வந்திருக்கிறது.
அதைப் பற்றிக் கூட மத்திய அரசு கவலைப்படவில்லை. இங்கே இருக்கக்கூடிய மாநில அரசு அதற்கு உறுதுணையாக இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை இங்குள்ள மாநில அரசு ஆதரித்திருக்கிறது.
இவற்றை எல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே போல மகளிர் சுயஉதவிக் குழு பற்றி சொன்னீர்கள். இந்த மகளிர் சுய உதவி குழு முதன் முதலில் கழக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், இதைச் சிறப்பாக செய்ய வேண்டும்.
நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக – துணை முதலமைச்சராக – கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஒவ்வொரு மாவட்டமாக சென்று 4 மணி நேரம், 5 மணி நேரம் மேடையில் நின்று கொண்டு அந்த சுயஉதவி குழுக்களுக்கான சுழல் நிதி, மானியம், வட்டியுடன் கூடிய கடன்களை எல்லாம் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் இன்றைக்கு வங்கிக்கு கூட செல்ல முடியாத நிலையில் கேவலமாக பேசுகிறார்கள் என்று ஒரு சகோதரி சொன்னார். இப்படி ஒரு நிலை இன்று நிலவுகிறது.
அதேபோல் இங்கு சகோதரி கீர்த்தனா பேசும் போது, – நான் எதார்த்தமாகத்தான் – என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் – என்று கேட்டேன். அதற்கு அவர் எம்.பி.பி.எஸ். படிப்பதாகச் சொன்னவுடன் ஒரு பெரிய புத்துணர்ச்சி ஏற்பட்டது. அந்த எம்.பி.பி.எஸ். இடத்தைக் கூட எப்படி வாங்கினேன் என்று சொன்னார்.
நீட் தேர்வு எழுதினால் தான் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் இருந்தாலும் அதை வென்று காட்டியிருக்கிறேன் என்று பெருமையாக சொன்னார். பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் சட்டமன்றத்தில் இரண்டு முறை ஏகமனதாக நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தோம். இதுவரைக்கும் அந்த பிரச்சனையைப் பற்றி முதலமைச்சர் வாய்திறக்கவில்லை.
அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கூட நீட் உள்ளே வரவில்லை. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும் அது வர முடியவில்லை. ஆனால் இப்போது வந்துவிட்டது என்றால் அதற்கு என்ன காரணம்? இந்த எடப்பாடி ஆட்சி, மத்தியில் இருக்கும் ஆட்சிக்கு மண்டியிட்டு, அவர்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் ஆட்சியாக இருக்கிறது என்பதுதான் காரணம்.
இதனை நீங்கள் புரிந்து கொண்டால் சரி. அது மட்டுமில்லை இங்கு இருக்கக்கூடிய தாய்மார்களை நான் அன்போடு கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
கடைக்குச் சென்று கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற பொருட்களை வாங்கும் போது கூட பேரம் பேசி, நல்ல பொருளா என்பதைப் பார்த்து வாங்கக் கூடியவர்கள் நீங்கள்.
நாற்றம் உள்ள கருவாடைக் கூட நல்ல நாற்றமா, கெட்ட நாற்றமா என்பதைப் பார்த்துத் தான் வாங்குவீர்கள். நாற்றத்தைப் பற்றிக் கவலைப்படும் நீங்கள், நாட்டை பற்றியா கவலைப்படாமல் இருந்து விடப் போகிறீர்கள்.
நாட்டை பற்றி கொஞ்சம் கவலைப் படுங்கள். நாடு நன்றாக இருந்தால்தான் நாம் நலமாக இருக்க முடியும். நாம் நலமாக இருந்தால்தான் நம்முடைய பிள்ளைகள் நலமாக இருக்க முடியும். நம்முடைய பிள்ளைகள் நன்றாக இருந்தால்தான் நம்முடைய சந்ததியினர் நன்றாக இருக்க முடியும்.
ஆகவே நாம் நன்றாக இருக்க, நாம் நலமோடு வாழ, கழகத்திற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். கலைஞர் ஆட்சியை உருவாக்க, நீங்கள் ஆதரவு தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு, அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி. வணக்கம்.