டெல்லி: கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. சீனாவில் உயிர்பலி மூன்றாயிரத்தை கடந்திருக்கிறது. மற்ற நாடுகளும் கொரோனாவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலும் அதன் பாதிப்பு எதிரொலிக்க இதுவரை 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்த வழிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.

அந்த வழிமுறைகள் என்ன என்று பார்க்கலாம்: முதலில், அடிக்கடி கைகளை நன்றாக சோப் போட்டு கழுவவேண்டும். நீங்கள் தும்மும் போதும், இருமும் போது முகத்தில் முகக்கவசம் ஒன்றை அணிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கைகளில் உள்ள அழுக்குகள் மறையும் வரை, ஓடும் நீரில் சோப் போட்டு நன்றாக கழுவ வேண்டும். ஆல்கஹால் தடவப்பட்ட பட்டி அல்லது சோப் கொண்டும் நீரில் கழுவலாம்.

துடைப்பதற்கு பயன்படுத்திய கைக்குட்டைகள் அல்லது திசு பேப்பர்களை மூடப்பட்ட குப்பை டப்பாக்களில் போட வேண்டும். தொடர்ந்து உங்களின் உடல்நிலையில் மாற்றம் தென்பட்டாலோ, உடல்பாதிக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிமுறைகளை பயன்படுத்தினால் கொரோனா தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறது மத்திய சுகாதாரத்துறை.

அதே நேரத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதையும் ஒரு பட்டியலாக அறிவித்து இருக்கிறது சுகாதாரத்துறை. அதாவது, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடம் நெருங்கி செல்ல வேண்டாம்.

பொது இடத்தில் எக்காரணம் கொண்டும் உமிழ்தல் கூடாது. விலங்கினங்களுடன் தொடர்பு கூடாது. சமைக்கப்படாத, அரைகுறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்ண வேண்டாம்.

இறைச்சிக்கடைகள், விலங்குகள் அறுவைக்கூடங்கள், பண்ணைகள் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுரைகள் இப்படி இருக்க, தமிழக அரசும் அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 044-29510400 அல்லது 044-29510500. மொபைல் எண்கள்: 94443 40496 அல்லது 87544 48477 எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உங்களுக்கு அறிகுறிகள் இருந்தால் pls இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை அழைக்கவும். உங்களுக்கு சோதனை செய்து, வீட்டிலே தனிமைப்படுத்தலாமா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டுமா என்று மதிப்பிடுவதற்கும். தீர்மானிப்பதற்கும் ஒரு குழு உங்களைச் சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.