கேரளாவின் எர்ணாகுளம் அருகே காலடி பகுதியில் நடிகர் டோவினோ தாமஸ் நடித்து வரும் மின்னல் முரளி திரைப்படத்திற்காக ரூ.50 லட்சம் செலவில் கிறிஸ்தவ தேவாலயத்தின் ‘செட்’ அமைக்கப்பட்டிருந்தது.
இன்னும் படப்பிடிப்பு முடியாத காரணத்தாலும் , கொரோனா ஊரடங்காலும் ஷூட்டிங் செட்டை அப்படியே விட்டுள்ளனர் .
இந்நிலையில் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த சிலர் தேவாலயம் போன்ற செட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். அந்தராஷ்ட்ர ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் இதற்கு பொறுப்பேற்றன. ஆதி சங்கராச்சாரியார் மடத்துக்கு அருகில் இந்த ‘செட்’ அமைக்கப்பட்டிருப்பதாக அவை காரணம் கூறின.
இந்நிலையில் ரதீஷ் மலயத்தூர் (ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் அமைப்பின் எர்ணாகுளம் மாவட்டத் தலைவர்), ராகுல் ஆகிய இருவரை கேரள போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் உறுப்பினர்கள் 7 பேர் மற்றும் பலர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.