ஸ்ரீநகர்:

காஷ்மீரில் மாயமான போலீஸ்காரர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் சோபியான் மாவட்டம் ஹெப் ஷெர்மல் கிராமத்தை சேர்ந்தவர் இஸ்பாக் அகமது தர். கடந்த 2012ம் ஆண்டில் போலீசில் சேர்ந்தார்.

கதுவா மாவட்டத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் விடுமுறையில் சென்ற இஸ்பாக், கடந்த 23ம் தேதி பணிக்கு திரும்பிருக்க வேண்டும். ஆனால், அவர் பணிக்கு திரும்பவில்லை. அவரை போலீசார் தேடி வந்தனர்.

 

இந்நிலையில், அவர் ஏகே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து அவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை காஷ்மீர் போலீசாரும் உறுதிபடுத்தியுள்ளனர்.