தயா கல்லூரி கட்ட கோவில் நிலத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி இன்று நேரில் ஆஜரானார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்து உள்ள மேலக்கோட்டையில் அழகிரியின் மகன் துரை தயாநிதி பெயரில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை கட்டுவதற்காக விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அழகிரி மீது நில அபகரிப்பு பிரிவில், சிவரக்கோட்டையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் புகார் அளித்திருந்தார். இப்புகாரின் பேரில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், மு.க அழகிரி, சம்பத், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் சம்பந்தப்பட்ட மு.க அழகிரி, சம்பத், சேதுராமன், சதீஷ்குமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர்.

அத்தோடு, தான் எம்.பியாக இருந்தபோது தனது வேட்புமனுவில் சொத்துக்களை கணக்கில் காண்பிக்காத காரணத்திற்காகக தொடரப்பட்ட வழக்கிலும் மு.க அழகிரி ஆஜரானார். இரு வழக்குகளையும் விசாரித்த நடுவர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி, வழக்கை நவம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.