சென்னை:

கோவையில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த மார்சிய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வருமான வரித்துறையினருக்கு பகிரங்கமாக கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிரமான பண வேட்டையும் நடைபெற்று வருகிறது.

திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தற்போது கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஸ்டாலின், அங்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு  கட்சி வேட்பாளர் நடராஜனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் எந்த அடிப்படையில் தேர்தல் ஆணையம் ரெய்டு நடத்தியது என்று கேள்வி எழுப்பியவர்,  மோடியின் வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கின்றது, போய் பறிமுதல் செய்ய முடியுமா? அங்கே வருமான வரித்துறை சோதனை நடத்த முடியுமா?

துணை முதல்வர் ஓ.பி.எஸ், தேனி வேட்பாளராக நிற்கக்கூடிய தன்னுடைய மகனுக்காக ஆயிரம் இரண்டாயிரம் என்று விநியோகித்து வருகிறார்.. இதற்கான ஆதாரங்கள் வெளியாகி வருகின்றன… ஆனால், வருமான வரித்துறையினர் அங்கே செல்லவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின்,  தேர்தலுக்காக அதிதிமுக அமைத்துள்ள கூட்டணி, கொள்கை கூட்டணி கிடையது, அது கொள்ளைக்கார கூட்டணி என்ற காட்டமாக தெரிவித்தவர், நேற்று வரை ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தவர்கள் இன்று தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக கூட்டணி சேர்ந்துள்ளனர் என்றும் விமர்சித்தார்.

தமிழகத்தில் பாஜக டெபாசிட் வாங்க முடியாது என்று கூறிய ஸ்டாலின்,  நீங்கள் தலைகீழாக நின்றாலும், ரோட்டில் உருண்டு புரண்டாலும் தமிழகத்தில் தாமரை மலராது – மலராது – மலராது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்