சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து, முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்து 97 பக்க புகார் மனு வழங்கினார்.

தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  கழக பொதுச்செயலாளர் துரைமுருகன், கழக பொருளாளர் திரு. T.R.பாலு MP , கழக துணை பொதுச்செயலாளர்  ராஜா எம்.பி., கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி,  கழக செய்தித்தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவின் ஆகியோருடன் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று, அங்கு   ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து, முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்து 97 பக்க புகார் மனு வழங்கினார். 

மனுவில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள்:

1. முதலமைச்சர் திரு பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார்.
2. துணை முதலமைச்சர் திரு ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிஷன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.
3. உள்ளாட்சி துறை அமைச்சர் திரு எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து- அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.
4. மின்வாரியத்துறை அமைச்சர் திரு பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.
5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.
6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் திரு சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.
7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் திரு ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.
8. மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.
முதற்கட்டமாக முதலமைச்சர் பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கொடுத்து- 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து – மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தியிருப்பட்டிருக்கிறது.
இந்த புகார்கள் தொடர்பாக 97 பக்க அளவில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.