சென்னை

கொரோனா பரவலை முன்னிட்டு பதவி ஏற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டு களிக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள திமுக புதிய ஆட்சியை அமைக்க உள்ளது.  திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.  அதையொட்டி அவர் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க  தம்மை அழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.  அதையொட்டி நாளை காலை மு க ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தனிப்பெரும்பான்மை கட்சியாக திமுகவுக்கு ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4-ஆம் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூடியது. அதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எனது பெயரைக் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். அருமைச் சகோதரர் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வழிமொழிந்தார்.

உதயசூரியன் எனும் ஒப்பற்ற சின்னத்தில் வென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக் கொண்டார்கள். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். பேரறிஞர் அண்ணா அலங்கரித்த நாற்காலியில், இத்தமிழறிஞர் கலைஞர் அமர்ந்து கோலோச்சிய பொறுப்பில், கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குத் தமிழக முதலமைச்சராகப் பதவிப் பொறுப்பு ஏற்பு செய்து வைக்க இருக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மே – 7, தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கிறது.

இரத்தமும் வியர்வையும் சிந்தி கழகத்துக்காக – நமது வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து -அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் பதவியேற்க முடியவில்லையே என்ற கவலை இருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமான கதாநாயகர்கள், கழக உடன்பிறப்புகளும் தோழர்களும் ஆகிய நீங்கள்தான். உங்களது அயராத உழைப்பால், அசைக்கவியலாத உறுதியால், கம்பீரத்தால், கடின முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி. ஆனால் கொரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது பேரலையாக எழுந்து வீசும் இந்தச் சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது.

அதனால் ஆளுநர் மாளிகையில், எளிய முறையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வோர் உடன்பிறப்பின் – தோழரின் உடல்நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுங்கள்!

கலைஞர் எனும் ஒரு தாய் பிள்ளைகளான கழக உடன்பிறப்புகள் இருக்கும் திசை நோக்கி வணங்கி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கத் தயாராகிவருகிறேன். உங்களது உழைப்பு கழக ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம்!” எனத் தெரிவித்துள்ளார்.