சென்னை: காலில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருப்பதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்திருந்தேன். அந்த அறுவை சிகிச்சையின் தொடர்ச்சியாக இன்னொரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன்.

பிரச்சாரத்தை தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக இருந்தது. சில நாட்கள் ஓய்வுக்கு பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடர்வேன்.

மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையை தொழில் நுட்பத்தின் வாயிலாக போக்கி கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும், வீடியோக்கள் வாயிலாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும்.

என் மண்ணுக்கும், மொழிக்கும், மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் அது தொடரும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.