மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், “நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவன் பெயர் நாதுராம் கோட்ஸே” என்று தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கமலின் நாக்கை அறுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் கமல் ரசிகர்கள் – அதிமுக தொண்டர்கள் இடையே சமூகவலைதளங்களில் கடுமையான வார்த்தை போர்கள் நடந்து வந்தன.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை தரக்குறைவாக பேசியதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மக்கள் நீதி மய்யம் நிர்வாகி புகழ்முருகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர்  கரூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளனர். அதில் உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கும் படி அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.