சென்னை: ‘நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்’ என கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

காலில் நடைபெற்ற அறுவை சிகிச்சை காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், டிவிட்டர் மூலம் அரசியல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, இன்று வெளியிட்டுள்ள பதிவிட்டில்,  கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு டிவிட்டில்,  காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது.

இன்னொரு டிவிட்டில்,  ‘பூரண சுதந்திரமே தேவை’ என்று வீரத்தை உயர்த்திப் போர்க்களம் கண்டவர் சுபாஷ் போஸ். இன்று (ஜனவரி 23) 125ஆவது பிறந்த நாள் காணும் அந்த நேத்தாவுக்கு, ரயில் விடுவது, பராக்கிரம தினமாக அனுஷ்டிப்பதோடு, அவரது கொள்கையை நெஞ்சில் நிறைப்பதே சிறந்த அஞ்சலி.

என குறிப்பிட்டுள்ளார்.