திருச்சி

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில் மொபைல்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட உள்ளது.

கோயில்களுக்குள் மொபைல் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது ஆயினும் பலர் அந்த தடையை மீறி மொபைலை உபயோகித்து வருகின்றனர். அது மட்டுமின்றி மொபைல் மூலம் கோவிலின் முக்கிய பகுதிகளை புகைப்படம் எடுக்கும் பழக்கமும் அதிகரிக்கிறது. இது கோவிலின் பாதுகாப்பு மற்றும் புனிதத் தன்மைக்கு எதிரானது என வலியுறுத்தியும் இந்த வழக்கம் தொடர்ந்து வருகிறது.

இதை தடுக்க ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பதி கோவில் ஆகியவற்றில் கோயிலினுள் மொபைல்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியர்களால் டிஜிடல் காமிராக்கள் மற்றும் வீடியோ ரிகார்டர்கள் உபயோகிக்கப்பதை மட்டுமே கண்டறிய முடிகிறது. ஆனால் மொபைல் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் ரங்கனாத பெருமாள் கோவில் தமிழகத்தின் மிகப் புகழ் பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வருவதால் இந்த கோவிலில் பாதுகாப்பு கருதி மொபைல் போன் எடுத்துச் செல்வதை தடை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேண்டுகோளை கோவில் நிர்வாகிகள் இந்து அறநிலையத்துறைக்கு அனுப்பி உள்ளனர்.

அறநிலையத் துறை அனுமதி வரும் வரை சோதனை முறையில் கோவிலில் உல்ள தெற்கு கோபுரம், கிழக்கு கோபுரம் மற்றும் வடக்கு கோபுரம் ஆகிய நுழைவாயில்களில் மொபைல் வைத்து விட்டு செல்ல சிறு பெட்டிகள் பத்து ரூபாய்க்கு வாடகைக்கு வைக்கப்பட்டுள்ளன. அறநிலையத் துறை ஒப்புதல் அளித்த பிறகு அதிகாரபூர்வ்மாக மொபைல் தடை அறிவிக்கப்பட உள்ளது.