துபாய்:

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழ்நிலையை அறிய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. சில சர்வதேச தனியார் நிறுவனங்கள் அங்கு புதிய காலனி அமைத்து மனிதர்களை குடியேற்ற முயற்சித்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது இத்தகைய ஆராய்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் இறங்கியுள்ளது. இதற்காக துபாயில் செவ்வாய் கிரகம் போன்ணு ஒரு மாதிரி உலகத்தை உருவாக்கவுள்ளனர்.

19 லட்சம் சதுர அடி பரப்பளவில் ராட்சத கூண்டு அமைக்கப்படுகிறது. இது துபாயின் பாலைவனத்தில் உருவாக்கப்படுகிறது. ரூ.879 கோடி செலவில் இதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு செவ்வாய் கிரக அறிவியல் நகரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகவுள்ளது.

இந்த மாதிரி உலகத்தில் மனிதர்களை தங்க வைத்து செவ்வாய் கிரகத்தில் வாழக் கூடிய சூழ்நிலை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் வெளி உலகத்தை பார்க்காமல் ஒரு வருடம் தங்கியிருக்க வேண்டும். தேவையான ஆக்சிஜன், உணவு, தண்ணீர் வழங்கப்படும்.

இந்த திட்டம் குறித்து துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷீத் கூறுகையில், ‘‘செவ்வாய் கிரகத்தில் மக்களை தங்க வைக்கும் முயற்சியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டுள்ளன. அதற்கு முன்னோடியாக இருக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கான முயற்சியே இது. 100 ஆண்டுகளில் அதாவது 2117-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

இதற்கு முன்னோடியாக சந்திரனில் நிரந்தரமான கிராமம் அமைக்க ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்காக 4 ஆயிரம் விண்வெளி நிபுணர்கள் பங்கேற்கும் கூட்டம் ஆஸ்திரேலியாவில் விரைவில் நடைபெறுகிறது.