சென்னை

சென்னை நகரில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. ஆயினும் குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 80 மிமீ,  ராமநாதபுரம் 40 மிமீ, பாம்பன் 30 மிமீ, ராதாபுரம் 20 மிமீ, கன்னியாகுமரி 10 மிமீ மழை பெய்துள்ளது.

வானிலை மைய இயக்குநர், “குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கில் காற்று சுழற்சி நிலை கொண்டு  இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். அத்துடன் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.  இது தவிர நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்: என்று தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முதல் சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருவதாகவும் இன்று மதியம் வரை மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.