டில்லி

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளாக ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நிகழ்த்தவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்..

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒரு டிவிட்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   அதில் அவர் பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் ஒரு முறை கூட செய்தியாளர் சந்திப்பை நிகழ்தாதது குறித்து விமர்சித்துள்ளார்.

ராகுல் தனது பதிவில், “பெங்களூரில் நான் நேற்று கர்நாடக தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டேன்.   அப்போது அந்த அறை உள்ளூர் செய்தியாளர்களில் இருந்து தேசிய செய்தியாளர்கள் வரை ஏராளமானோரால் நிரம்பி இருந்தது.   நேரமின்மையால் என்னால் அனைத்து செய்தியாளர்களுக்கும் கேள்வி கேட்க வாயப்பளிக்க முடியவில்லை.   அதற்காக மன்னிக்கவும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்புக் கூட்டம் எதுவும் நிகழ்த்தவில்லை.  நான் அவரைப் போல் இருக்க மாட்டேன்.   செய்தியாளர்கள் கூட்டத்தை அடிக்கடி நிகழ்த்துவேஎன்” என கூறி உள்ளார்.  அத்துடன் தாம் கர்நாடக செய்தியாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பதிந்துள்ளார்.