டில்லி:

மிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக மிகக்குறைந்த அளவில் வெறும் 4 சத விகிதம் மட்டுமே வழங்கி உள்ள தகவலை மத்திய விவசாயிகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்துவதோடு அல்லாமல், மோடி அரசின் மாற்றந்தாய் மனப்போக்கை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.

தமிழகத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை புகுத்தி  தமிழகத்தை  சுடுகாடாக மாற்றி வரும் நிலையில், தமிழக அரசு கோரிய வறட்சி நிவாரண நிதியையும் ஒதுக்காமல், தமிழகத்தை யும், தமிழக  மக்களையும்  தொடர்ந்து வஞ்சித்து வருவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2015 முதல் 2018 வரை தமிழகம் மட்டுமல்லாது தென் மாநிலங்களான
புதுச்சேரி, கேரளா, கர்நாடகாஆந்திரா, தெலுங்கானா உள்பட 14 மாநிலங்கள்  வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டு, விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையான பாதிப்பை சந்தித்தனர்.

வறட்சி நிவாரண பணிகளுக்காக  ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 605 கோடி கேட்டு மாநில அரசுகள் சார்பில், மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மத்திய அரசு ரூ.23,190.69 கோடி மட்டுமே மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. வறட்சி காரணமாக மத்திய அரசிடம்  மாநில அரசுகள் கேட்ட நிதியில் இது வெறும் 19 சதவிகிதம் என்பது தெரிய வந்ததுள்ளது.

இதில் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தா மோனால்,  தமிழக அரசு  மத்திய அரசிடம் கோரியிருந்த ரூ.39,565 கோடி வறட்சி நிதிக்கு, மத்திய அரசு வழங்கியது  ரூ.1,748.28 கோடி மட்டுமே.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த மோடி அரசு, வறட்சி நிவாரண நிதியில்  வெறும் 4 சதவீதம் மட்டுமே வழங்கி உள்ளது. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சற்று விரிவாக பார்த்தோமானால்,  கடந்த 2016-17-ம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 கிராமங்கள் வறட்சி பாதித்த கிராமங்களாக கண்டறியப்பட்டன.  இதில், 1,564 கிராமங்களில் நேரடியாக சென்று கள ஆய்வும் நடத்தப்பட்டது. இதில் 87 சதவீத பகுதிகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான சேதத் தை சந்தித்திருந்தன. இது பெரும்பாலான கிராமங்கள் கடுமையான வறட்சியை சந்தித்தது உறுதி செய்யப்பட்டது.

ஆனால், ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் இதே காலக்கட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வறட்சி நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசிடம் நிதி உதவி கோரியிருந்தன.

ராஜஸ்தான் ரூ.21,648 கோடி கேட்டு, மத்திய அரசிடம் இருந்து ரூ.2,387 கோடி பெற்றிருந்தது.  இதேபோல ஆந்திரா ரூ.5,193 கோடி கேட்டு, ரூ.1,065.84 கோடி பெற்றிருந்தது. உத்தரகாண்ட் ரூ.91.97 கோடி வறட்சி நிவாரண நிதி கேட்டு, ரூ.70.22 கோடி பெற்றிருந்தது.  இதுதான் நிதி உதவி கோரியதில், மத்திய அரசிடம் இருந்து அதிக தொகையை பெற்ற முதலாவது மாநிலம் ஆகும்.

இந்த பட்டியலில் மிகக்குறைந்த அளவிலான வறட்சி நிவாரண நிதி ஒதுக்கப் பட்டது தமிழகத்துக்கு மட்டுமே.  தமிழகத்தை வறட்சி பூமியாக மாற்றுவதில் மோடி அரசு வகிக்கும் பங்கும் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும்,  மத்திய  விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலில் தெரியவந்துள்ளது.