ந்தியாவை சுடுகாடாக மாற்றும்  இஐஏ 2020 டிராப்ட் அதாவது,   மத்தியஅரசின் புதிய “சுற்றுச்சூழல் 2020 வரைவு அறிக்கை பொதுமக்களிடையே பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக  அரசு, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020”  என்று வரைவு அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இந்த வரைவை தமிழ் உட்பட 22 மொழிகளை வெளியிட உச்ச நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்தும், மத்தியஅரசு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு செவிசாய்க்காமல், இன்னும் பல மாநில மொழிகளில் வெளியிடாமல் இருமாப்பு காட்டி வருகிறது.
பொதுமக்கள், நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் மற்றும் நாட்டின் சுற்றுச்சூழல் மீது எந்தவித அக்கறையுமின்றி, இந்தியாவை சுடுகாடாக மாற்றும் நோக்கத்தில் பாஜக அரசு, இந்த புதிய சுற்றுச்சூல் மதிப்பீடு விதிகளை, கொரோனா பீதிக்கு மத்தியிலும் வெளியிட்டு, தனது முதலாளித்துவத்தை வெளிப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, பெருகி வரும் ரசாயண ஆலைகளால், டெல்லி உள்பட  வடமாநிலங்களில் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகி, மக்கள் சுவாசிக்கவே திணறி வருகின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், தற்போது, கொரோனா வைரஸை எதிர்த்து, தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், பேரழிவை ஏற்படுத்தும் பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்களின் தொழில்வளர்ச்சிக்கு சாமரம் வீசும் வகையில்  சுற்றுச்சூழல் விதிகளை மாற்றி புதிய விதிகளை உருவாக்கி வரைவு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது மோடி அரசு.
நாட்டின் வளர்ச்சி என்று கூறிக்கொண்டு, பாரத தேசத்தையும், 130 கோடி மக்களையும் பாதாளத்தில் தள்ளும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவது, இந்த, “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020”ன் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
நாட்டின் வளர்ச்சி என்ற பெயரால், சுற்றுச்சூழல் சட்டத்தில், இதுபோன்ற புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டதால், வளர்ச்சி என்பது, மக்களின் அழிவுக்கே வழிவகுக்கும்… இதனால், மத்திய அரசன் இந்த முயற்சிக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
மக்களின் ஜனநயாக குரல்வளையை நெரிக்கும் வகையில், உருவாக்கப்பட்டுள்ள இஐஏ 2020 டிராப்ட், அதாவது , “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020”  என்ற வரைவு அறிக்கையை அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக எதிர்க்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் எழுப்பி உள்ளன.
எதிர்கால சமுதாயம், நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ, மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
சரி… இஐஏ 2020 டிராப்டில் அப்படி என்னதான் கூறப்பட்டு உள்ளது என்பதை பார்ப்போம்..

நாட்டின் ஒரு பகுதியில்  பெரு நிறுவனங்கள்,  தொழிற்சாலைகள் தொடங்க வேண்டுமானால், தொழில் தொடங்க விரும்பும் பகுதி எப்படிப்பட்டது, அந்த பகுதி மக்களின் அடிப்படை வாழ்வா தாரம், அந்த பகுதி மக்களின் எண்ணம் குறித்த கருத்து கேட்பு, தொழிற்சாலையிலான அந்த பகுதி பாதிக்கப்படுமா சுற்றுச்சூழல் உள்பட மாநில அரசின் அனுமதி உள்பட பல்வேறு சூழல்களை ஆராய்ந்து, நடைமுறைப்படுத்த, சுற்றுச்சூழல் சட்டம் 2006 சட்டத்தின் கீழ்  சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து, அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையால்,  சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாது என்று அறிந்த பிறகுதான், அந்த தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்படும்.
 ஆனால், இதுபோன்ற அனைத்து நடைமுறைகளையும் தகர்தெரியும் வகையில் உருவாக்கப் பட்டு உள்ளது, தற்போது வெளியிடப்பட்டுள்ள  சுற்றுச்சூழல் தாக்க வரைவு  2020.
இதில் குறிப்பிட்டுள்ள தகவலின்படி,  குறிப்பிட்ட சில பெரிய முதலீட்டு தொழில்களுக்கான பொதுமக்கள் கருத்து கேட்பு நடைமுறையை  தடை செய்கிறது. 
அதே போல் தொழிற்சாலைகள் குறித்த கருத்து கேட்புக்கான கால அவகாசம் 30 நாட்களில் இருந்து இருபது நாட்கள் ஆக குறைக்கப்பட்டுள்ளது. 
 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை இல்லாமலேயே ஒரு திட்டத்தை தொடங்கவும் ஏற்கனவே உள்ள திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் அனுமதியளிக்கிறது. 
திட்டம் தொடங்கப்பட்ட பிறகு ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த திட்டத்தை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 மாநில மத்திய குழுக் கள் என்று இரு அமைப்புகளிடம் ஒப்புதல் வாங்க வேண்டியதில்லை. இதனால் மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
சதுப்பு நிலங்களில் மண்ணைப்போட்டு சமன்படுத்த அனுமதி வாங்க வேண்டியதில்லை என்றும்,  வறண்ட புல்வெளிகளை தரிசு நிலங்களாக கணக்கில் கொண்டு தொழிற்சாலை தொடங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 
புதிய  திட்டங்களுக்கு சூழலில் தாக்க மதிப்பீட்டில் இருந்து விலக்கு பெற 20,000 சதுர மீட்டர் என்று இருந்த வரம்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. 
இதுபோன்ற புதிய விதிகள் காரணமாக, மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் போன்ற பெரிய பெரிய ரசாயண ஆலைகள், மருத்துவ ஆலைகள் அமைக்க மோடி அரசு சிவப்பு கம்பளம்  விரித்து வரவேற்பு செய்துள்ளது.
இது சாமானிய மக்களின் மீது விழுந்துள்ள சம்மட்டி அடி.
இஐஏ 2020 டிராப்ட்  சட்டமாக நிறைவேற்றப்பட்டால் இந்தியா சுடுகாடாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே, மோடி அரசின் பணமதிப்பிழிப்பு, டிஜிட்டல் மயம் என்ற பெயரில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சாமானிய  மக்கள், விரைவில் நோய் நொடிகளால் பீடிக்கப்பட்டு, குடிக்க நீரின்றி, வாழ வசதியின்றி,  மரணக்குழிக்குள் செல்ல வேண்டிய காலம் விரைந்து வரும் என்பதையும் மறுப்பதிற்கிலை…