டில்லி

இந்து மத பாரம்பரியத்தை ஒழுங்கு படுத்த நாடெங்கும் உள்ள புரோகிதர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் பாடத்திட்டம் கொண்டு வர மோடி அரசு உத்தேசித்துள்ளது.

இந்து மதத்தின் சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயத்தின்படி பூஜைகள் மற்றும் சடங்குகளைப் புரோகிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் செய்கின்றனர்.  இவர்களுக்காக வேத பாட சாலைகள் மற்றும் ஆகம கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன.   ஆயினும் இதற்கான ஒரு பாடத் திட்டம் இல்லாமல் உள்ளது.  அத்துடன் இவ்வாறு கல்வி பயில்வோரின் கல்வித் திறன் குறித்து எவ்வித தேர்வும் நடத்துவதில்லை.

மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து இந்து மத மேம்பாட்டு குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் பல திட்டங்கள் இயற்றி வருகின்றன.   எனவே அர்ச்சகர்கள் மற்றும் புரோகிதர்களுக்கு சரியான முறையில் கல்வி அளிக்கப் பாடத் திட்டம் ஒன்றைக் கொண்டு வர மோடி அரசு முடிவு செய்துள்ளதாகத் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரி தெரிவித்தபடி ”ஆன்மீகத் துறை செயல்பாடுகளான பூஜைகள், யாகம் போன்ற சடங்குகளில்  பயன்படுத்தப்படும் மந்திரங்களை ஒரு ஒழுங்கு முறைப்படுத்தி அவற்றை ஒரு  பாடத் திட்டமாக்க மத்திய மோடி அரசு விரும்புகிறது.   இதன் மூலம் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த பூஜை மற்றும் சடங்கு மந்திரங்கள் கற்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் திறனைப் பரிசோதிக்க ஒன்று முதல் பத்து வரை தகுதித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.  இந்த தேர்வில் வேதம் மற்றும் சாஸ்திரங்களை நேர்முகமாக அல்லது தனியாகப் பயின்றவர்கள் பங்கு பெற முடியும்.   இதற்கு முக்கிய மொழியாக சமஸ்கிருதம் விளங்குவதால் இந்த மாணவர்களுக்குச் சமஸ்கிருதம் கற்பிக்கப்படும்.   இந்த கல்வி எந்த ஊர்களில் கற்பிக்கப்படும் என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை எனினும் இது அநேகமாகக் காசி அல்லது மதுரா போன்ற இடங்களில் அமையும்” எனத் தெரிய வந்துள்ளது.

இந்த யோசனையை அமைச்சகத்துக்குத் தெரிவித்துள்ள காசியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜாராம் சுக்லா, “பழங்கால சாஸ்திரிய முறைப்படி இந்த பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என நான் அமைச்சகத்துக்குப் பரிந்துரை அளிட்துளேன்.  அத்துடன் இந்த பாடத்திட்டத்தில் வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம், ஆகியவையும் இடம் பெற வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளேன்.  இதன் மூலம் இந்த கல்வி பெறுவோருக்கு வேலை வாய்ப்பு பெற்று மதம் சுமார் ரூ.50000 வரை ஊதியம் பெற வேண்டும்” எனக் கூறி உள்ளார்.