மராவதி

ந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத மோடிக்கு ஆந்திராவில் நுழைய உரிமை கிடையாது என முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.

பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்தது. அதற்கு மத்திய பாஜக அரசு மறுப்பு தெரிவித்ததால் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணியில் இருந்து விலகியது. அத்துடன் பாஜகவுக்கு எதிராக விமர்சனங்கள் செய்து வருகின்றது.

சமீபத்தில் நடந்த தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கூட்டணை அமைத்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. வரப்போகும் மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி தொடராது என காங்கிரஸ் அறிவித்த போதிலும் தெலுங்கு தேசம் இது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் உள்ளது.

இந்நிலையில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கட்சி தொண்டர்களிடம், “ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்ட போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற மோடி தவறி விட்டார்.

இவ்வாறு பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட பிறகும் அதை மோடி நிறைவேற்றாததற்கு அவருடைய குறுகிய அரசியல் எண்ணமே காரணம். பிரதமர் மோடிக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் இந்த மாநிலத்தில் நுழைய உரிமை கிடையாது,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருப்பதியில் பேசும் போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும் கூடுதல் நிதி அளிப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார். நம்மைப் பொறுத்த வரையில் நாம் ஆந்திராவுக்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் சந்திரசேகர ராவைப் போலவே மோடிக்கே ஆதரவு அளிப்பார். இவர்கள் இருவரின் நோக்கமும் ஆந்திராவின் வளர்ச்சியை தடுப்பதாகும். மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என ஆந்திரா குரல் எழுப்பியதர்கு இன்று இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி உள்ளது” என வீடியோ கான்ஃபரன்சில் தெரிவித்தார்