வாஷிங்டன்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மகள் இவான்கா ட்ரம்ப் இந்தியா வரவேண்டும் என இந்தியப் பிரதமர் மோடி அழைத்ததாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடி – ட்ரம்ப் சந்திப்பு வெள்ளை மாளிகையின் ரோஜா தோட்டத்தில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் அதிபர் மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரெத், துணை அதிபர் மைக் பென்ஸ், மற்றும் அமைச்சர்கள் உடன் இருந்தனர்.
மோடி, தனது உரையில், இந்தியா அமெரிக்கா உறவு மேலும் பலப்பட்டுள்ளதாகவும், தீவிரவாத நடவடிக்கைகளை அடக்க இரு அரசும் சேர்ந்து பாடுபடும் எனவும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர், “இந்திய அமெரிக்க உறவை மேலும் மேமபடுத்த பாடுபடுவேன், உலக தொழில்முனைவோர் சங்கத்தின் அமெரிக்க பிரதிநிதியாக இவான்கா விளங்குவார். அமெரிக்க தொழில்முனைவோர் சார்பாக என் மகளை இந்தியா வரவும், அவரை பிரதிநிதியாக ஏற்றுக் கொள்வதாகவும் கூறிய அருமை நண்பர் மோடிக்கு நன்றி” என தன் உரையில் குறிப்பிட்டார்.
இது தவிர ட்ரம்ப்பும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தமது அரசு, இந்திய அரசுடன் சேர்ந்து செயல்படும் என உறுதிபட தெரிவித்தார்