டெல்லி: தம்மை சிக்கலில் யாரும் மாட்டிவிட்டுவிட வேண்டாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் 5000க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

அதற்காக நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்த ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.

இந் நிலையில் பிரதமர் மோடியை கவுரவிக்க அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நில்லுங்கள் என்று தகவல்கள் பரவின. தம்மை யாரும் சர்ச்சையில் மாட்டிவிட வேண்டாம் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

என்னை கவுரவிக்க  விரும்பினால் ஒரு ஏழை குடும்பத்திற்கு உதவும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏழை குடும்பத்திற்கு உதவுவதைவிட, எனக்கு நீங்கள் சிறந்த மரியாதையை  அளிக்க முடியாது என்று அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.