டில்லி

ன்று பிரதமர் மோடி மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் நிகழ்வில் 69 ஆம் பகுதியில் உரையாற்றினார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி மனதின் குரல்  என்னும் வானொலி நிகழ்வில் உரையாற்றி வருகிறார்.  இன்று இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஆகும்.   இதையொட்டி இன்று ஒலிபரப்பான இந்நிகழ்வின் 69 ஆம் பகுதியில் மோடி உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு :

“நாடுமுழுவதும் இன்று தசரா (விஜயதசமி பண்டிகை) கொண்டாடப்படுகிறது. புனிதமான இந்த நாளில் அனைத்து மக்களுக்கும் நான் தசரா பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.  இந்த தசரா பண்டிகை என்பது பொய்மையை வென்ற உண்மையின் கொண்டாட்டமாகும்.

அத்துடன் பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களுக்கு மத்தியில் நாம் பொறுமையாக இருந்ததன் வெற்றியையும் இந்த தசரா குறிக்கிறது. அனைத்து மக்களும் தற்போது மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து அடக்கமாகப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறீர்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போரில் நாம் ஏறக்குறைய வெற்றி பெறுவது உறுதி ஆகி உள்ளது.

முன்பு, துர்கா பூஜையின் போது ஏராளமான மக்கள் சென்று துர்கா சிலை வைக்கப்பட்டிருக்கும் இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்வார்கள்.  அது வழக்கமான நிகழ்வாக இருந்தது.  இந்த முறை அவ்வாறு நடக்கவில்லை.

முன்பு தசரா பண்டிகையையொட்டி மிகப்பெரிய கண்காட்சி, பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த முறைகள் இப்போது மாற்றப்பட்டுள்ளது.  ஏராளமான மக்கள் கூடும் பண்டிகையான  ராம லீலாவை காணக்கூட இந்த முறை கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இம்முறை மக்கள் கூட்டமாக திரளும் அனைத்துப் பண்டிகைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அடுத்து ஈத், ஷரத் பூர்ணிமா, வால்மீகி ஜெயந்தி, தான்தேஸ்ராஸ், தீபாவளி, சாத் பூஜை, குருநானக் ஜெயந்தி போன்ற பண்டிகைகள் வர உள்ளன. இந்த கொரோனா காலத்தில் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.

பொதுவாகப் பண்டிகை காலம் என்றாலே மக்கள் உற்சாகத்தில், மகிழ்ச்சியில் அதிகமான பொருட்களை வாங்குவார்கள். இம்முறை மக்கள் மனதில் ஒன்றை நினைவில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வாங்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்த கொரோனா நேரத்தில் நமக்குத் துணையாக இருந்தவர்கள், சமூகத்துக்குத் துணையாக இருந்தவர்களைப் பண்டிகை நேரத்தில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு உதவிய துப்புரவு தொழிலாளர்கள், வீட்டுக் காவலர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோர் கொரோனா காலத்தில் நமக்குத் துணையாக எண்ணற்ற உதவிகளைச் செய்தனர் என்பதால் அவர்களோடு சேர்ந்து நாம் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.

நம்முடைய எல்லையில் காவல் காக்கும் வீரர்களை இந்தப் பண்டிகை காலத்தில் நினைத்துப் பார்க்கவேண்டும்.  அத்துடன் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் வீடுகளில் விளக்கு ஏற்றி அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும்.” என மோடி பேசி உள்ளார்.