டில்லி,

182 தொகுதிகளை உடைய  குஜராத்தில்  இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது, 621முறை ராகுல் பெயரை பிரதமர் மோடி உச்சரித்துள்ளதாக காங். செய்தி தொடர்பாளர் மணிஷ்திவாரி கூறி உள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் முதல் குஜராத்தில்  தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

காங்கிரசுக்கு ஆதரவாக பட்டேல் சமூகத்தினர் மட்டுமின்றி விவசாயிகள் மற்றும் இளைஞர்கள், இளம்பெண்களின் ஆதரவும் பெருகி வருகிறது.

இந்நிலையில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி அதிகமுறை ராகுல் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர்  மணிஷ்திவாரி கூறிஉள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த மோடி, ”குஜராத் மாடலை” பற்றி ஒருமுறை கூட பேச வில்லை என்றும், ஆனால், அகில இந்தியா  காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பெயரை 621 முறை உச்சரித்திருக்கிறார் என்று கூறி உள்ளார். இது ஒரு பத்திரிகையாளரின் கணக்கீடு என அவர் கூறி உள்ளார்.

குஜராத்தில் இதுவரை நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான 29 பிரசார கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசி உள்ளார் என்றும், அப்போது, ராகுல் காந்தி  பெயரை நேரடியாகவோ, மறைமுகமாக 621 முறை கூறி உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும், காங்கிரஸ் பெயரை 427 முறையும்,  சர்தார் வல்லபபாய் படேல் பெயரை 209 முறை யும்,  விகாஸ் என்பதை 103 முறையும், இந்து என்பதை 93 முறையும், ராம் என்பதை 27 முறையும் கூறி உள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.