சென்னை:

மிழ்நாட்டில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

கடந்த 18ந்தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து, 500 மதுக்கடைகள் ஒழிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில், மத்திய அரசு அறிவித்து உள்ள  7வது சம்பள கமிஷன் பரிந்துரையை மாநிலத்தில் அமல்படுத்துவது குறிதது மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த ஜெயலலிதாவின் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை.

2. முதன்மை செயலாளர், உள்துறை.

3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை.

4. செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை.

5. டாக்டர் பி.உமாநாத், உறுப்பினர் செயலாளர்.

இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றிய மைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம், ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.6.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.