மின்சார துறையில் ரூ. 50,000 கோடி வரையில் நடந்திருக்கும் கொள்ளையை எக்னாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி ஆங்கில பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.
தேர்தலில் மோடிக்கு செலவழித்தஅதானி, டாடா, எஸ்ஸார், இந்தியா சிமெண்ட்ஸ், ஜிண்டால் உள்ளிட்ட 40 நிறுவனங்களுக்கு இதில் தொடர்பு இருப்பது  தெரியவந்திருக்கிறது.
இந்த பெரும் முறைகேடுகள்  மூன்று முறைகளில் நடந்திருக்கிறது.

  1. இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை அதிகப்படுத்தி கணக்கு காண்பிப்பது.
  2. மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான கருவிகளை இறக்குமதி செய்வதில் விலையை உயர்த்தி கணக்கு காட்டுவது.
  3. இழப்பீட்டு தொகை என்ற முறையில் அரசின் இழப்பீடை தவறான முறையில் பெறுவது.

சரி, இப்படி ஏன் இவர்கள் விலையை அதிகப்படுத்தி பொய்க் கணக்குகாட்ட வேண்டும்?
மக்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் அரசால் நிர்ணயிக்கப்படுவது கிடையாது. மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றாலேயே மின் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது.
இதை தீர்மானிக்க அவர்களே வகுத்துகொண்ட கொள்கையின் அடிப்படையில் கெப்பாசிட்டி கட்டணம் (நிலைகட்டணம்), எனர்ஜி கட்டணம் (முதன்மை எரிபொருள் கட்டணம்) ஆகியவற்றின் அடிப்படையில் மின் கட்டணம்  தீர்மானிக்கப்படுகிறது.
மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்கள் முதலீடு மற்றும் செலவினங்களை கூறுவார்கள். அதற்கேற்ப விலையை வைத்து (உயர்த்தி)  மக்களிடமிருந்து வசூலித்து தருகின்றன ஒழுங்குமுறை ஆணையங்கள். ஆக எவ்வளவு அதிகமாக செலவு செய்ததாக சொல்ல முடியுமோ, அந்த அளவுக்கு உற்பத்தி செலவை அதிகரித்துச் சொல்கிறார்கள்.
நிலக்கரி இறக்குமதியில் எப்படி மோசடி நடக்கிறது?
download
டாடா, அதானி, அம்பானி, எஸ்ஸார் உள்ளிட்ட நிறுவனங்கள் சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் உள்ளிட வெவ்வேறு நாடுகளில் லெட்டர் பேட் நிறுவனங்களை பதிவு செய்துகொள்கிறார்கள் அல்லது தங்களது நிறுவனத்தின் கிளை நிறுவனங்களை பெயருக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
இவர்கள் இறக்குமதி செய்யும் நிலக்கரி இந்தோனேசியாவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்குதான் கொண்டுவரப்படுகிறது.  ஆனால் அதற்குரிய இன்வாய்ஸ் எனப்படும் விலைப்பட்டியல் ஆவணங்களோ பல நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கும் கைமாறி இறுதியாக இந்தியா கொண்டுவரப்படுவதை போல  போலியாக தயாரிக்கப்படுகிறது.
அதாவது இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரியை துபாயில் இருக்கும் நிறுவனம் வாங்கி அதிக விலைக்கு மலேசியாவிலிருக்கும் நிறுவனத்திற்கு விற்பதாகவும்,  இப்படி கைமாறி இறுதியாக அதானி கைக்கு வருவதாகவும் சொல்வார்கள்.
இதனால் அதானி “வாங்கும்” நிலக்கரி செலவு அதிகமாகும். ஆனால் இதில் சோகமான நகைச்சுவை என்னவென்றால்,  இந்தோனேசியாவிலிருக்கும் நிலக்கரி சுரங்கம் முதல் அது பயணிக்கும் அனைத்து நிறுவனங்களும் அதானியின் சொந்த நிறுவனங்கள்தான்.
இந்திய அதானி நிறுவனம் இந்த அதிகமான  விலையை வெளிநாட்டிலிருக்கும்  தனது  துணை நிறுவனத்திற்கு அனுப்பிவிடும். அத்துணை நிறுவனம், உண்மையான விலையை மட்டும் இந்தோனேசியாவின் நிலக்கரி அனுப்பிய நிறுவனத்துக்கு  அனுப்பிவிட்டு மற்ற தொகையை அமுக்கிவிடும்.
அந்த பணம்  வரியில்லா சொர்க்க நாடுகளில் கருப்பு பணமாக பதுக்கப்படும்.
இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் விலையை எம்முறையில் கணக்கிட்டாலும் மெட்ரிக் டன் ரூ. 3,300-க்கு (50 அமெரிக்க டாலர்) மேல் போகாது.
ஆனால் போலியான ஆவணங்கள் மூலம் ரூ. 5,380 –க்கு (80 அமெரிக்க டாலர்) வாங்கியதாக கணக்கு காட்டுகிறார்கள்.
இந்த இடைப்பட்ட ரூ.2000(30 டாலர்) , சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அமுக்கப்படுகிறது.
உதாரணமாக கடந்த 2014-2015-ம் ஆண்டு கணக்கை பார்ப்போம். அந்த நிதி ஆண்டில் 212.11 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.  இது முந்தைய ஆண்டை காட்டிலும் 27% அதிகமாகும்.
ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2000 ஏமாற்றப்டுகிறது  என்றால் 212.11 மில்லியன் டன்னுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஏமாற்று நடந்திருக்கும் என்கிறது “எக்கனாமிக் அன்ட் பொலிட்டிகள் விக்லி” இதழ்.
இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருப்பதாக மனோஜ் குமார் கார்க் என்ற இடைத்தரகரை மத்திய வருவாய் நுண்ணறிவு(Directorate of Revenue Intelligence) பிரிவு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில மின்சார வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்றுள்ள ரூ.280 கோடி ஊழல் தொடர்பாக இந்த க்கைது நடந்தது. இந்த மனோஜ் குமார் துபாயை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் ஜெனரல் டிரேடிங்(Glints Global Trading LLC) நிறுவனத்தையும், ஹாங்காங்கை தலைமையகமாக கொண்டு கிலின்ட்ஸ் குலோபன் லிமிட்டட்(GlintsGlobalLimited) என்ற நிறுவனத்தையும் நடத்துகிறார்.
இவர் மீது ஏற்கனவே பேங்க் ஆஃப் பரோடா(BOB) வங்கியில் நடைபெற்ற அந்நிய செலவாணி மோசடி மற்றும் சட்டவிரோத பாசுமதி அரிசி இறக்குமதி ஆகிய குற்றச்சாட்டுகள்  உள்ளன.
இதில் பேங்க் ஆஃப் பரோடா வழக்கு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழுவால் விசாரிக்கபட்டு வருகிறது, பாசுமதி விவகாரம் மத்திய உளவுதுறையால் விசாரிக்கபடுகிறது. இதன் மூலம் இந்த வழக்குகளின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்.
இந்த இடைத்தரகரின் நிறுவனம் மூலமாகத்தான் தமிழக மின்வாரியம் நிலக்கரி இறக்குமதி செய்திருக்கிறது. இதில் மிகவும் கவனிக்க வேண்டிய விசயம்,  இந்த நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதியில் முன்னனுபவமே கிடையாது என்பதுதான்.
தமிழநாடு மின்சார வாரியம் MGB commodities என்ற நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. இந்த MGB நிறுவனம் கிலின்ட்ஸ் நிறுவனதின் மூலம் இந்தோனேசியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்கிறது. நிலக்கரி சுரங்கத்திலிருந்து $45 க்கு பெறப்படும் நிலக்கரியின் விலையை $87 என போலியான ஆவணங்கள் மூலம் தெரிவித்து தமிழக மின்வாரியத்திடமிருந்து (மிக அதிகமான)  தொகையை பெறுகிறது இந்தநிறுவனம்.
(தொடரும்)
 
இரண்டாம் பகுதி: https://patrikai.com/modi-2-year-record-50-thousand-crore-scam-in-power-sector-part-2/