சென்னை:

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதை முன்னிட்டு சென்னையில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் வரும்  மோடிக்கு கருப்பு கொடி காட்டும் முயற்சியில் தமிழக அரசியல் கட்சிகள்  ஈடுபட்டு உள்ளதால் சென்னையில் பல இடங்களில் இன்று போக்குவரத்து பாதிக்கப்படும், அதன் காரணமாக போக்குவரத்து  நெரிசல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இன்று வேலைக்கு செல்லும் பொதுமக்கள், அலுவலர்கள் தங்கள் பயணத் திட்டத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ற வாறு செயல்படுங்கள்.

இன்று காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் சென்று, அங்கிருந்து திருவிடந்தையில் நடைபெறும்  ராணுவ கண்காட்சியை  தொடங்கி வைக்க உள்ளார். மேலும் அடையார் புற்றுநோய் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

மோடியின் தமிழக வருகைக்கு திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சியினர்கள், தமிழ் அமைப்புகள் இன்று கருப்பு காட்டப்படும் என அறிவித்துள்ள நிலையில், சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி, போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.

அதன்படி  சென்னை விமான நிலையம் முதல் அடையாறு வழியாகச் செல்லும் வாகனங்கள் சின்னமலை வழியாக, நந்தனம் சந்திப்பிற்கு சென்று திரு.வி.க பாலம் வழியாக அடையாறு செல்ல வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

அடையாறில் இருந்து விமான நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள், டைடல் பார்க் வழியாக எஸ்ஆர்பி டூல்ஸ் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

மூப்பனார் பாலம் வழியாக காந்தி மண்டபம் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

அடையாறு செல்ல வேண்டிய வாகனங்கள் சேமியர்ஸ் வழியாகவும், விமான நிலையம் செல்ல வேண்டிய வாகனங்கள் நந்தனம் வழியாகவும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இதுபோல ஈசிஆர் சாலை, மாமல்லபுரம் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.  எனவே சென்னைவாசிகளே உஷார்… இன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்…