டில்லி,

காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மோடியின் தவறான கொள்கையே காரணம் என்று ராகுல்காந்தி டுவிட் செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமர்நாத் சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் பரிதாபமாக பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பிரதமர் மோடியின் கொள்கைகள் காரணமாக, காஷ்மீரில் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர்.   இந்தியாவுக்கு இது பெரிய பின்னடைவு என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், பிடிபி கட்சியுடன்  ஏற்பட்ட கூட்டணியின் பயனாக  மோடிக்கு கிடைத்த குறுகிய கால அரசியல் பலனுக்கு இந்தியா பெரிய விலை கொடுக்க வேண்டியதாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.