டில்லி:

பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். அப்போது, அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்ட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டுக்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 29ந்தேதி தொடங்கியது. அன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த 1ந்தேதி பொது நிதி நிலை அறிக்கை நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து அனைத்து கட்சியினரும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில,  குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில்  பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்.

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி செய்த பாவங்களுக்கு இப்போது அனுபவிக்கிறது என்றும், நாட்டை பிளவுப்படுத்தியது காங்கிரஸ் கட்சியே என்றும் கூறினார்.

மேலும், தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்ற மோடி, காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியம் காரணமாகவே   ஆந்திர மாநில எம்.பிக்கள் தனி அந்தஸ்து கோருகின்றனர் என்றும் கூறினார்.

ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ நாட்டில் புதிதாக மாநிலங்களை உருவாக்கி நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து  அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆனால்,  அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது உரையை நிறுத்தாமல் உரத்த குரலில் கோபமாக பேசினார். ஆனால், அதை சட்டை செய்யாமல்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

 

இது பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.