சென்னை: தேசியத்தையும், தெய்வீகத்தையும் கொண்டுவர போராடும் மோடியின் வழியே இனி என் வழி என்று பாஜகவில் இணைந்த ராம்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றதேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக தலைமை ஆள்பிடிக்கும் வேலையையும் தீவிரப்படுத்தி உள்ளது. அந்த வலையில் தற்போது  நடிகர் சிவாஜியின் குடும்பம் சிக்கி உள்ளது. பாரம்பரியமாக காங்கிரஸ் பேரியக்கத்தைச்சேர்ந்த மறைந்த சிவாஜி கணேசனின் குடும்பம் தற்போது காவியாக மாறி உள்ளது. இது சிவாஜி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தனது மகன் துஷ்யந்த் உள்ப குடும்பத்தினருடன்  நேற்று பாஜக தலைமை அலுவலகம் சென்று கட்சியில் தங்களை இணத்துக்கொண்டனர்.  தி.நகரில் உள்ள  கமலாலயத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சி. டி. ரவி உள்ளிட்டோர் ராம்குமாருக்கு பாஜகவின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

பின்னர் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும்  சி. டி. ரவி உடன்  ராம்குமார் ஆகியோர் நிருபர்களை சந்தித்தார்.  அப்போது அவர்  கூறியதாவது:-  தேசியத்தையும் தெய்வீகத்தையும் ஒன்று கலந்து நடித்தவர் சிவாஜி. மோடியும் அந்த வழியிலேயே பயணிக்கிறார்.  மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும், தாய் நாட்டிற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்றுதான் பாஜகவில் இணைந்தேன்.

எனது தந்தையின் அரசியல் பாதை எப்படி இருந்தது என அனைவரும் அறிவர்.  பல்வேறு முதல்வருக்கும், பிரதமருக்கும் எனது தந்தை தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். எனவே அவர் அரசியலிலும் பெரிய தலைவர்தான். தேசியத்தையும் தெய்வீகத்தையும் மீண்டும் கொண்டுவர வேண்டி பா.ஜ.க.வில் இணைந்தோம்,  மோடியின் வழியே இனி எனது வழி. வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை மலரும் தேசியம், தெய்வீகம் வேண்டும் காங்கிரசில் இணைந்து பயணித்த சிவாஜி பின்னர் அந்த கட்சியிலிருந்தி வெளியேறிவிட்டார் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.

ராம்குமார் சேர்ந்ததுகுறித்து குறிய  தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், ராம்குமார் தனது குடும்பத்துடன் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளார் , குன்னூர் முன்னாள் சட்டமன்ற சவுந்தரபாண்டியனும் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டுள்ளார் என்றார்.

பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி. டி. ரவி .தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார்.