உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் ஜுப்ளிஹில்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் அவரது நெருங்கிய நண்பரும், தெலுங்கு நடிகருமான மோகன்பாபு கடும் அதிர்ச்சி அடைந்தார்.

தற்போது திருப்பதியில் உள்ள மோகன்பாபு, ரஜினியின் உடல் நிலை குறித்து அவரது மனைவி லதா ரஜினிகந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோரிடம் தொலைபேசியில் விசாரித்தார்.

“கவலைப்படும் படியாக எதுவும் இல்லை. சாதாரண ரத்த அழுத்தம் தான்” என அவர்கள் மோகன்பாபுவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்த மோகன்பாபு, “ரஜினிகாந்த் உறுதியான மனமும், திடமான உடலும் கொண்டவர். விரைவில் பூரண குணம் அடைந்து ஷுட்டிங்கில் கலந்து கொள்வார்” என குறிப்பிட்டார்.

தெலுங்கானா நகராட்சி அமைச்சர் கே.டி.ஆர். தனது ட்விட்டர் பக்கத்தில் “தலைவர் விரைவில் குணம் அடைவார்” என தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி