சென்னை:

விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் இந்த நாள், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நாள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.


மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக ‘பிரதம மந்திரியின் விவசாய நல நிதி’ தொடங்கப்பட்டது.

2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் குறு சிறு விவசாயிகளுக்கு ஆண்டு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இதனால் நாடு முழுவதும் 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்ந திட்டத்தை பிரதமர் மோடி உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார். அப்போது சுமார் ஒரு கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் தலா 2 ஆயிரம் ரூபாய் நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

இன்று வாக்குக்குப் பணம் கொடுக்கும் நாள். விவசாய குடும்பத்தினர் வாக்குகளைப் பெறுவதற்காக அதிகாரப்பூர்வமாக பாஜக அரசு லஞ்சமாக ரூ. 2 ஆயிரத்தை இன்று வழங்குகிறது.

இன்று ஜனநாயகத்தின் கருப்பு நாள்.
5 ஆண்டுகள் விவசாயத்தை சீரழித்துவிட்டு, இன்று ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் தரப் போகிறார்கள். இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறென்ன?

5 பேர் கொண்ட விவசாய குடும்பத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.17. இது உதவித் தொகையா, பிச்சையா, லஞ்சமா?

வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதைவிட, மிகப்பெரிய வெட்கக்கோடு வேறேதும் இல்லை. இதில் மிகப் பெரிய அவமானம் என்னவென்றால்,வாக்குக்கு லஞ்சம் கொடுப்பதை தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம் தடுக்க முடியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுதான் என தெரிவித்துள்ளார்.