லண்டன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தின் தன்மை, 3வது போட்டியின் ஆடுகள தன்மையைப் போலவே இருந்தால், இந்தியாவுக்கான புள்ளிகளை ஐசிசி குறைக்க வேண்டுமென பேசியுள்ளார் அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர்.

இங்கிலாந்தின் பல கிரிக்கெட் நட்சத்திரங்கள் கதறுவதைப் போலவே, இவரும், அகமதாபாத் ஆடுகளம், டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் இல்லை என்று கதறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “அகமதாபாத் ஆட்டம், இங்கிலாந்தில் சனிக்கிழமைகளில் விளையாடும் கிளப் கிரிக்கெட் போல் இருந்தது. அந்தவகை கிரிக்கெட்டில், ஒரு அணி 100 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிடும். பின்னர், எதிரணிக்கு அந்த ரன்களை எடுப்பதே சிரமமான விஷயமாக இருக்கும்.

ஏனெனில், ஆடுகளத்தின் தன்மை அப்படியானதாக இருக்கும். பந்துகள் ஏடாகூடமாக திரும்பும். அகமதாபாத் ஸ்டேடியம் போன்ற உலகின் பிரமாண்டமான மற்றும் அழகான ஒரு ஆடுகளத்தில், ஒரு டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவடைவது ரசிகர்களுக்கு கொடுமையானது.

வெறும் 900 பந்துகளுக்குள் ஒரு டெஸ்ட் போட்டி முடிவடைவதை ஏற்க முடியாது. அப்படியான ஒரு கிரிக்கெட்டை ஆட விரும்பினால், ஏதேனும் ஒரு பூங்காவில்கூட அதை ஆடிக்கொள்ளலாம்” என்றுள்ளார் அவர்.