டில்லி:
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி நடப்பு ஆண்டு 6.2% ஆக இருக்கும் என்று பிரபல பொருளாதார நிறுவனமான மூடிஸ் தெரிவித்து உள்ளது.
நியூயார்க்கில் உள்ள மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகத் தில் இந்திய பொருளாதாரம் குறித்த ஆய்வு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சி அடைந்து 6.2 ஆக குறையும் என்று கணித்துள்ளது.
இதே நிறுவனம் மோடியின் கடந்த ஆட்சியின்போது, 2015-16ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக உயரும் என்று கணித்து கூறியது.. முதல் காலாண்டில் இது 7.3 சதவீதமாக உயரும் என்றும் பொருளதார வளர்ச்சியில் சீனாவை முந்தும் என்றும் கணித்திருந்தது.
ஆனால், தற்போது இந்திய பொருளதாரம் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே ஜிடிபி 6.8 % ஆக குறைந்த நிலையில், தற்போது 6.2 ஆக குறையும் என்று கணித்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான (2019) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.8 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைத்தது.
இதற்கு காரணம், பலவீனமான உலகப் பொருளாதாரம் ஆசிய ஏற்றுமதியைத் தடுமாறச் செய்துள்ளதாகவும், நிச்சயமற்ற இயக்கச் சூழல் முதலீட்டை எடைபோட்டுள்ளது என்றும் மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஆனால், பிரதமர் மோடியோ, 2024-25ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த மதிப்பு ஐந்து ட்ரில்லியன் டாலர் ஆகவேண்டும் என்று இலக்கைநிர்ணயித்துள்ளார். இந்த பொருளதார இலக்கை இந்தியா அடைய வேண்டுமென்றால், ஒவ்வோர் ஆண்டும் இந்திய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) எட்டு சதவீதமாக அதிரிக்க வேண்டும்.
ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தியாவின் பல துறைகள் சரிவை கண்டு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவின் ஜிடிபி குறைந்து வருகிறது. மேலும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக 22 காசுகள் சரிந்து 72.03 ரூபாயாக உள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவதால் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முந்தைய ஒப்பந்தங்களின்படி பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் சிக்கலில் தவிக்கின்றனர்.