கோராக்பூர்:

கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உ.பி. மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 70 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்சிஜன் பற்றாக்குறையே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

மீண்டும் ஆகஸ்ட் 27, 28 மற்றும் 29-ம் தேதிகளில் மட்டும் மருத்துவமனையில் 61 உயிரிழப்புகள் பதிவாகியது. ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய்கள் கடுமையான மூளை வீக்கம், காய்ச்சலை ஏற்படுத்தும், இதன்காரணமாகவே உயிரிழப்பு நேரிட்டு உள்ளது என கூறப்பட்டது. கனமழை, வெள்ளம் மற்றும் நேர் தேங்குதல் காரணமாக என்சிபாலிட்டிஸ் தாக்கம் பரவும் எனவும் உள்ளூர் மருத்துவர்கள் எச்சரித்தனர்.

இதைதொடர்ந்து அங்குள்ள பரூக்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் பலியான சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரங்களில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மருத்துவமனையில் புதிதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள அதிகாரி டாக்டர் பி.கே. சிங் கூறுகையில், ‘‘நேற்று 9 குழந்தைகளும், இன்று 15 குழந்தைகளும் உயிரிழந்தன. இவ்வருடம் மட்டும் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கையானது ஆயிரத்து 341 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் மருத்துவ வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 புதிய வெப்பமூட்டும் கருவிகளும் மருத்துவமனையில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் மருத்துவர்கள், உதவியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்’’ என்றார்.