கெய்ரோ:

எகிப்தில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக அந்நாட்டின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது பாதுகாப்புப் படைகள் கடும் தாக்குதலை மேற்கொண்டன.

இது குறித்து எகிப்து ராணுவ செய்தித் தொடர்பாளர் தமீர் அல்-ரெஃபாய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘வடக்கு சினாய் பகுதியில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது விமானப் படையினர் குண்டு வீச்சு நடத்தினர்.

பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் வாகனங்கள், ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்ற விபரத்தை எகிப்து ராணுவம் வெளியிடவில்லை. போர் விமானங்களும் ஆளில்லா விமானங்களும் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

எகிப்தின் அல்-ஆரிஷ் நகரில் உள்ள மசூதியை பயங்கரவாதிகள் தாக்கியதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் இந்த பதிலடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.