சிவகங்கை மாவட்டம் கீழடியில் நான்காம் கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 1,200 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.

கீழடி தொல்லியல் களம்   இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வருகிறது. இது  ஒரு சங்க கால வசிப்பிடம். இந்த அகழாய்வு மையம் சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையில் கீழடி என்ற கிராமத்தில் உள்ளது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான அகழாய்வாக கீழடி ஆய்வு உள்ளது.

மத்திய தொல்லியல் துறையினர் இதுவரை கீழடியில் நடத்திய அகழ்வாராய்ச்சியில் சங்க காலத் தமிழர்களின் நகர நாகரீகத்தின் ஆதாரமாக சுமார் 7,600 தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய தொல்லியல் துறையால் இங்கு மூன்று வருடங்கள்  அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 4ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்தது.

இதையடுத்து கீழடியில் நான்காம்  கட்டமாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது 1200 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள், “ மண் ஓடுகள், டெரக்கோட்டா சிற்பங்கள், கிணறு, இரும்பு தளவாடங்கள் உள்ளிட்ட பொருட்கள் இந்த அகழாய்வின் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளனர்.