டில்லி

முன்னாள் நிதி அமைச்சர் ஜெட்லியின் மரணத்தால்  மோடியின் வெளிநாட்டுப் பயணம் நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 22 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து  வருகிறார். அவர் பிரான்ஸ், அமீரகம்,பெஹ்ரைன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மோடி நேற்று பெஹ்ரைன் சென்று விட்டு இன்று மீண்டும் பிரான்ஸ் திரும்புகிறார். அவர் அங்கு நடைபெறும் ஜி 7 மாநாட்டில் கலந்துக் கொள்ள உள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும் பாஜக அரசின் முன்னாள் நிதி அமைச்சருமான  அருண் ஜெட்லி நேற்று மரணம் அடைந்தார். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர்களில் அருண் ஜெட்லியும் ஒருவர் ஆவார். கடந்த மோடி அட்சியில் அவர் கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் மோடிக்கு மிகவும் ஆதரவாக ஜெட்லி செயல் பட்டு வந்தார்.

எனவே மோடி அருண் ஜெட்லிக்கு இறுதி மரியாதை செலுத்தச் சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு டில்லி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடியின் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சார்பில் அருண் ஜெட்லிக்கு மத்திய பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி செலுத்த உள்ளார்.