திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரின் சிசிடிவி கேமராவில் சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியிடம் 60 வயது முதியவர் ஒருவர் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட காட்சி பதிவாகியிருந்தது.

அந்த சிறுமி இதுபற்றி தனது அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கூறினார். ஆனால் அந்த பெண் அதை கண்டுகொள்ளாமல் சினிமா பார்ப்பதில் தனது கவனம் செலுத்தினார். சைல்டுலைன் அமைப்பு மூலம் சங்கரன்குளம் போலீசில் தியேட்டர் நிர்வாகம் சார்பில் புகார் செய்யப்பட்டது.

ஆனால் போலீசார் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் கேரளா டி.வி.யில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மலப்புரம் எஸ்பி உத்தரவின் பேரில் சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரன் விசாரணை நடத்தினார். சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தொழில் அதிபரான மைதீன்குட்டியை போலீசார் கைது செய்தனர்.கைதான தொழில் அதிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது. போஸ்கோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாயாரும் தொழில் அதிபர் அருகே இருந்துள்ளார். இதை அவர் தட்டிக்கேட்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயாரின் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.