காரமடை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிஸ்கட்டில் விஷம் தடவி பாலில் கலந்து கொடுத்து 3 வயது குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் பால்ராஜ். சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கு, மனைவி ரூபினி, மகள் தேவிஸ்ரீ ஆகியோர் உள்ளனர். நேற்று காலை தேவிஸ்ரீ சரவணம்பட்டி கரட்டு மேடு முருகன் கோவில் கிரிவலப்பாதையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியா காவல்துறையினர், குழந்தையின் தாய் ரூபினி தனது குழந்தையை காணவில்லை என கூறி அப்பகுதிக்கு வந்ததை கவனித்தனர். ரூபிணியை பிடித்து விசாரணை நடத்திபதில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து ரூபிணியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரூபினி கள்ளக்காதலுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் கள்ளக்காதலன் தமிழுடன் சேர்ந்து குழந்தையை கொன்றதாக கூறினார். இதையடுத்து ரூபினியை கைது செய்த காவலர்கள், அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில், தனக்கும், காரமடை அருகே உள்ள வெள்ளியங்காட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது என்றும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு தேவிஸ்ரீ என்று பெயர் வைத்தோம் என்றும் கூறியுள்ள ரூபிணி, தனக்கும், பால்ராஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, தனது கணவர் தன்னையும், குழந்தையையும் பிரிந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அச்சமயத்தில், அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து தனது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது என்றும், அதை ஏற்று பேசியபோது தான் தமிழ் என்பவருடன் தமக்கு பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறியுள்ள ரூபிணி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது தமிழ் தன்னை தொடர்பு கொண்டு, தன்னோடு சேர்ந்து வாழ அழைத்ததாகவும், இதனையடுத்து குழந்தையை அழைத்துக்கொண்டு சரவணம்பட்டிக்கு சென்று, கணவன்-மனைவி என கூறி பல இடங்களில் வீடு தேடி அழைந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இருவருக்கும் வீடு கிடைக்கவில்லை. இரவானதால் கரட்டுமேட்டில் உள்ள அரசு பள்ளியில் இருவரும் தங்கியுள்ளனர்.

அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாகவும், குழந்தை அழுதுக்கொண்டே இருந்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், தமிழுடன் சேர்ந்து தான் குழந்தையை கொன்றதாகவும் ரூபிணி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குழந்தை இறந்த பின்னர், எங்கேயாவது கொண்டு வீசி விட்டு வரும்படி தமிழிடம் தாம் கூறியா நிலையில், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை என்றும், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அரை மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ள ரூபிணி, காலையில் குழந்தை இறந்து கிடப்பதை மக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் கூறியதால், குழந்தையை காணவில்லை என்று நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உல்லாசத்து இடையூறாக இருந்ததால், பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய் ரூபினியை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ரூபினியின் கள்ளக்காதலன் தமிழ் என்பவரை 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.