மும்பை:

பிரபல தொழிலதிபரும், இந்தியப் பணக்காரர்களில் முதலிடத்தில் இருப்பவருமான ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கறுப்புப்பணச் சட்டப்படி வருமான வரித்துறை மற்றும்  மத்திய நேரடி வரி வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை வருமான வரி பிரிவு மற்றும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி)  முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிதா அம்பானி, அவரது 3 குழந்தைகளான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி ஆகியோருக்கும்  2015ம்ஆண்டு கறுப்பு பணச்சட்டத்தின்படி கடந்த மார்ச் மாதம் 28ச்நதேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் மிக முக்கிய பணக்காரர்கள் வரிசையில் இருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி. இவருடைய ரிலையன்ஸ் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு மோடி அரசு அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கி வருகிறது. இதனால் முகேஷ் அம்பானி அனைத்து தொழில்களி லும் லாபத்தை சம்பாதித்து இந்தியாவின் பணக்காரர்களில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்கள் குறித்தும், மேலும் சுவிஷ் வங்கி யில் பணம் பதுக்கி இருப்பதாகவும் ஏற்கனவே புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே டில்லி முதல்வர் கெஜ்ரிவால் புகார் கூறியிருந்தார்.‘

ஜெனீவாவில் உள்ள எச்எஸ்பிஎஸ்சி வங்கியில்  சுமார் 700 இந்தியர்கள் கணக்கு வைத்திருக்கும் விவரங்களை அரசாங்கம் பெற்றபோது, ​​2011 ஆம் ஆண்டில் ஐ-டி துறையின் விசாரணை தொடங்கியது. 2015 ஆம் ஆண்டில் நடந்த விசாரணையில், சுவிஸ் லீக்ஸ் எனப்படும் சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ஐசிஐஜே), எச்எஸ்பிசி ஜெனீவாவில் 1,195 கணக்கு வைத்திருப்பவர்கள் இருப்பதாகக் கூறியது.

ஆனால், அதை மறுத்த முகேஷ் அம்பானி, உலகின் எந்த பகுதியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட் ரீசுக்கோ, முகேஷ் அம்பானிக்கோ சட்டவிரோதமான எந்த வங்கி கணக்கும் கிடையாது. வழக்க மான வணிகத்தின் அங்கமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்களுக்கு எச்எஸ்பிசி உள்ளிட்ட பல்வேறு உலக வங்கிகளில் கணக்குகள் உண்டு என்று கூறியிருந்தார்.

ஆனால், எச்எஸ்பிசி வங்கியின்  ஜெனீவாவில் 14 கணக்குகள் இருப்பதாகவும்,. இதில் சுமார், 601 மில்லியன் டாலர் பதுக்கப்பட்டு இருப்பதாகவும், இவை அனைத்தும்  ரிலையன்ஸ் குழுமத்தின் பல்வேறு மத்தியஸ்தர்கள் மூலம் இணைக்கப்பட்டு இருப்பதாகவும் ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில்தான் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்  வருடாந்திர கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, அடுத்த 18 மாதங்களுக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, கடன் இல்லாத நிறுவனமாக மாற்றப்படும் என்று தெரிவித்திருந்த தும் குறிப்பிடத்தக்கது.