அலங்காநல்லூர்:

லங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் காளைகள் பதிவு இன்று தொடங்கியது. அதையடுத்து, காளைகளுக்கு மருத்துவர்கள் குழுவினர் உடற் தகுதி குறித்த சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு இன்று கலெக்டர் தலைமையில்  முகூர்த்தக்கால் நடப்பட்டு காளைகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஒரு மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் பொங்கலன்று (15ந்தேதி)‘ அவனியாபுரத்திலும், 16ந்தேதி, பாலமேட்டிலும், 17-ந்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில்,  போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கான பதிவு மற்றும் உடற்தகுதி சோதனை இன்று நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூரில் 700 காளைகளும், பாலமேட்டில் 650 காளைகளும் அனுமதிக்கப்படும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ள நலையில்,  அலங்காநல்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசினர் பெண்கள் பள்ளியில் காளைகளுக்கான பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

காளைகளின் உடற்தகுதி சோதனை செய்ய  30-க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். காளைகளின் உயரம், வயது, கொம்பின் தன்மை, எடை ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது.

காளைகள் பதிவில் மதுரை, தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வானங்களில் தங்களது காளைகளை ஏற்றி வந்துள்ளனர்.

இதே போல் பாலமேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், அவனியாபுரம் கால்நடை மருந்தக வளாகத்திலும் இன்று காளைகளுக்கான பதிவு தொடங்கியது. இதிலும் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், சர்ச்சை காரணமாக இழுபடிறி நீடித்து வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி அங்குள்ள வாடிவாசல் முன்பு இன்று நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் வினய், மாணிக்கம் எம்.எல்.ஏ. முன்னிலையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் விழாக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.