மோடியை வானளாவ புகழும் முலாயம் சிங் மருமகள்..

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் பிரதான எதிரியாக இருப்பவர், முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர். அந்த மாநிலத்தில் முதல்-அமைச்சராக இருந்தவர்.

இவரது இளைய மகன் பிரதீக் யாதவின் மனைவி அபர்ணா. இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார்.

திடீரென அபர்ணா, பிரதமர் மோடியைப் புகழ ஆரம்பித்துள்ளார்.

 

‘கொரோனா விவகாரத்தை மோடி, பிரமாதமாகக் கையாள்கிறார். அவர், ஊரடங்கைப் பிரகடனம் செய்ததை உலகமே பாராட்டுகிறது’’ என்று போகும் இடமெல்லாம் சொல்லி வருகிறார்.

இந்த நிலையில் அபர்ணாவுக்கு ‘’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது, உ.பி. மாநில பா.ஜ,க.அரசு.

’ முலாயம் சிங் மருமகள், கட்சி மாறப்போகிறார்’’ என ஊடகங்கள் கொட்டை எழுத்தில் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் அமைந்துள்ளது மாமனார் முலாயம் சிங் யாதவ் அளித்துள்ள பேட்டி.

‘’ என் மருமகளுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது , 500 % பா.ஜ.க.வின் ராஜதந்திர நடவடிக்கை’’ என்று சீறிப்பாய்ந்துள்ளார், முலாயம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில், லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் போட்டியிட்ட, அபர்ணா, தோற்றுப்போனார்.

வரும் தேர்தலில் அவர் பா.ஜ.க.வேட்பாளராக அதே தொகுதியில் போட்டியிடலாம் எனச் செய்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.

-பா.பாரதி.