சென்னை: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில், சுமார் 20 ஆயிரம் சதுர அடியில், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்த 1996ம் ஆண்டு உருவாக்கப்பட்டது கோயம்பேடு வணிக வளாகம். சுமார் 3000க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்டது இந்த வளாகம்.

தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அதேசமயம், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை என்ற புகார் நீண்டகாலமாக இருந்து வருகிறது. எனவே, நடக்கும் இடங்களில் வாகனங்களை நிறுத்துவது தொடர்ந்தது.

இதற்கு தீர்வாக, இந்த வளாகத்துக்கு அருகில் புதிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ முடிவு செய்தது. இதனடிப்படையில், இங்கு 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படவுள்ளது.

எனவே, இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது என்று தொடர்புடைய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.