சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் இந்தி நடிகை கங்கனா ராணாவத், இதனால் பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார்.

இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டி கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் மீதும் மும்பையில் உள்ள பாந்த்ரா காவல்நிலையத்தில் வழக்கு ( எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மூன்று முறை சகோதரிகள் இருவருக்கும் சம்மன் அனுப்பபட்டது. இந்த நிலையில் பாந்த்ரா காவல்நிலையத்தில் தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் பாம்பே உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது போன்று, அவர்கள் வலைத்தளங்களிலோ அல்லது மின்னனு ஊடகத்திலோ கருத்து எதுவும் சொல்லவில்லை” என வாதாடினார்.

இதையடுத்து, கங்கனாவும், ரங்கோலியும் பந்த்ரா காவல் நிலையத்தில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பாம்பே உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இருவரையும் கைது செய்ய இடைக்கால தடையும் விதித்தது.

– பா. பாரதி